பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்

பகவான் ராமகிருஷ்ணர் நம் நாட்டில் பிறந்த பல்லாயிரக்கணக்கான மகான்களில் ஒருவர். மிக சமீப காலத்தில் தோன்றிய ஒரு பெரிய மகான்... சுவாமி விவேகானந்தரை ஆன்மீகப் பாதையில் செலுத்திய குரு... அவர் தம் மொழிகளைக் கேட்டலும் படித்தலும் நம் மனத்திற்கு அமைதியையும், தெளிவையும் வழங்கும் என்பதில் ஐயமே இல்லை.

1. ஆகாயத்தில் மேகங்கள் தோன்றிச் சூரியனை மறைக்குமானால் அதன் பிரகாசமும் மறைந்து போகும். அது போல மனத்தில் அகங்காரம் இருக்கும் வரையில் அதில் ஈசுவர ஜோதி பிரகாசிக்காது.

2. அகங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கை கூடாது. பிறப்பும் இறப்பும் இருந்தே தீரும்.

3. மழைத் தண்ணீர் மேட்டு நிலத்தில் தங்கி நிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு ஒடி வந்து விடுகிறது. அது போல் இறையருள், தற்பெருமையும், கர்வமும் உள்ளவர்களுடைய உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை; பணிவுள்ளவர்களின் உள்ளத்தில் தான் தங்கி நிற்கும்.

4. "என் செயலாவது யாதென்று மில்லை" என்றும் கொள்கை மனத்தில் உறுதியாக நிலைக்குமானால், மனிதனுக்கு இந்தப் பிறவியிலேயே முக்தி உண்டாகும். அதன் பிறகு அவனுக்கு வேறொரு பயமுமில்லை.

5. இனிப்புத் தின்பண்டங்களால் ஏற்படும் தீங்கு கற்கண்டால் விளைவதில்லை. அது போல் ‘நான் இறைவனின் அடிமை, இறைவனின் பக்தன்‘ என்னும் அகங்காரம் இருப்பதில் தீங்கொன்றும் இல்லை. அவை ஒருவனை இறைவனுக்கு அருகில் கொண்டு சேர்க்கும். இது தான் பக்தி யோகம் எனப்படும்.

6. இரவில் வானில் பல விண்மீன்களைக் காண்கிறாய். ஆனால் சூரியன் உதித்ததும் அவை தென்படுவதில்லை. ஆதலால் பகற்பொழுதில் ஆகாயத்தில் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லலாமா? மனிதனே! உனது அஞ்ஞான காலத்தில் நீ இறைவனைக் காண முடியாததனால், இறைவனே இல்லை என்று சாதிக்காதே!

7. பெறுதற்கரிய இந்த மானிடப் பிறவியைப் பெற்றவன் இப்பிறவியிலேயே இறைவனை அறிய முயலாது போனால் அவன் வானில் பிறந்தவனே ஆவான்.

8. முதலில் இறைவனைத் தேடு; பிறகு உலகப் பொருளைத் தேடு. இதற்கு மாறாகச் செய்யாதே. ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு நீ உலக வாழ்க்கையில் நுழைந்தால் உனக்கு மனச்சஞ்சலமே இராது.

9.எண்ணெய் இல்லாது போனால் விளக்கு எரியாது, அது போல், இறைவனில்லாமல் போனால் மனிதன் உயிர் வாழ முடியாது.

10. வேக வைத்த நெல்லை, பூமியில் விதைத்தால் அது மறுபடியும் முளைக்காது; வேக வைக்காத நெல் தான் முளை விடும். அதுபோல உண்மை ஞானமாகிய தீயால் வெந்த ஒருவன் பரிபூரணனாக இறப்பானானால் அவனுக்கு மறுபிறவி கிடையாது. அஞ்ஞானத்துடன் மரணமடைந்தால் மீண்டும் பிறக்க வேண்டியது தான்.

11. நெருப்புக்கும், அதன் எரிக்கும் சக்திக்கும் உள்ள தொடர்பு போன்றது பிரம்மத்துக்கும் சக்திக்குமுள்ள தொடர்பு.

12. தசைத் தட்டில் கனமான பக்கத்தில் தராசு முள் மையத்தை விட்டுச் சாய்ந்து விலகியிருக்கும். அது போல் பெண்ணாசை, பொன்னாசைகளில் கனத்த மனம் இறைவனை விட்டு விலகித் தடுமாறுகிறது.

13. இறைவனது சன்னிதானத்தில் தர்க்க புத்தி, படிப்பு இவைகளில் எதுவும் பயன்படாது. அங்கே ஊமை பேசும். குருடு காணும். செவிடு கேட்கும்.

14. சர்வ சக்தி வாய்ந்த கடவுளுடைய அருள் வந்தடையும் போது ஒவ்வொருவனும் தன் குற்றத்தைக் காண்பான். இதனை அறிந்து நீ வீணாகத் தர்க்கம் செய்யாதே.

15. இறைவன் திருநாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் எவனுக்கு மயிர்க்கூச்செடுத்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுமோ அவனுக்கு அது தான் கடைசிப் பிறவி.

16. படகு தண்ணீரில் இருக்கலாம். ஆனால் தண்ணீர் படகினுள் நுழையக் கூடாது. மனிதன் உலகத்தில் வாழலாம். ஆனால் உலக ஆசை அவனிடத்தில் இருக்கக் கூடாது.

17. சம்சார வாழ்க்கையில் இருந்தால் என்ன? அனைத்தையும் அவனுக்கே அர்ப்பணம் செய்து அவனிடம் சரணமடைந்து விடு. அதன் பிறகு உனக்கு எவ்விதக் கஷ்டமும் இருக்காது. யாவும் அவனது அருளாலே நடை பெறுகிறது என்பதை அறிவாய்.

18. காந்த ஊசி எப்போதும் வடக்குத் திசையையே காட்டுமாதலால், கடலில் செல்லும் கப்பல்கள் திசை தவறிப் போவதில்லை. மனிதனுடைய மனம் இறைவனை நாடியிருக்கும் வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய கடலில் திசை தப்பிப் போக மாட்டான்.

19. வீடு கட்டும் போது சாரம் அவசியம். ஆனால் வீடு கட்டி முடித்து விட்டால் சாரத்தைத் தேடுபவர் யாருமில்லை. அது போல ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. பின்னர் அவசியமில்லை.

20. ஒருவர் சிரமப்பட்டு விறகும், பிறவும் தேடி நெருப்பு உண்டாக்குகின்றார். அதன் உதவியால் பலர் குளிர் காய்கின்றனர். அது போல மிகவும் சிரமப்பட்டுத் தவம் செய்து இறைவனை அடைந்த மகான்களோடு பழகுவதால் பலர் இறைவனிடத்தில் சுலபமாக மனத்தை வைக்க முடிகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.